இந்தியாவின் வலியுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்ப்பதாகவே தெரியவில்லை - பா அரியநேத்திரன்
முழு அதிகாரப் பரவலுக்கு இந்தியா, இலங்கையை வலியுறுத்தினாலும் இலங்கை இந்தியாவின் வலியுறுத்தலுக்கு செவிசாய்ப்பதாகவே தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே வாயால் வடை சுடுவதைவிட்டு விட்டு கையால் வடை சுடவேண்டும், இன்னும் சொல்வதானால் செயலில் அக்கறை காட்ட இந்தியா முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தமிழர்கள் உரிமைக்கான போராட்டம் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை ரீதியாகவும், அதன்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுத ரீதியாகவும் மௌனித்த பின்னரான காலத்தில் சம்மந்தன் தலைமையில் இடம்பெறும் தற்போதய இராஜதந்திர செயல்பாடும் 73 வருட காலங்களாக தொடரான அரசியலை செயல்முறைகளிலும் அயல் நாடான இந்தியாவிற்கு ஏனைய நாடுகளை விட கரிசனையும் பங்களிப்பும் அதிகளவு இருந்து கொண்டே உள்ளது.
இந்தியாவில் யார் பிரதமராக தெரிவானாலும் தமிழ்தேசிய தலைமைகள் அவர்களை நேரடியாக சந்தித்து வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு விடயங்களை பல தடவைகள் வலியுறுத்திய வரலாறுகள் இன்று நேற்றல்ல அமரர் இந்திராகாந்தி அம்மையார் இந்திய பிரதமராக இருந்த காலம் தொடக்கம் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக உள்ள காலம் வரையும் தொடராகவே அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்குமாறு கேட்ட வரலாறுகள் உள்ளன.
அதன் அடிப்படையில்தான் அமரர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலப்பகுதியான 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த அமரர் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் ஆட்சியில் 13ஆவது அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் அடிப்படையில் மாகாணசபை முறை உருவாக்கப்பட்டது.
அதில் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் முதன்முதலாக 1988இல் இடம்பெற்று வடக்கு, கிழக்கு மாகாணசபை திருகோணமலையில் இயங்கியது என்பதும் அதன்பின் 2006இல் மக்கள் விடுதலை முன்ணணி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை இரண்டாக வடக்கிற்கு தனியாகவும் கிழக்கிற்கு தனியாகவும் பிரிக்கப்பட்டதும் 2008இல் தனியாக கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது என்பதெல்லாம் வரலாறு.
இந்திய அரசின் அழுத்தம் காலணமாக அதிகாரப்பகிர்வுக்காக கொண்டுவரப்பட்ட மாகாணசபை அதிகாரங்கள் படிப்படியாக பரிக்கப்பட்டு தற்போதைய அரசின் காலத்தில் மாகாண நிர்வாகத்தின் கீழ் இருந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள் என வடக்கு, கிழக்கில் இருந்த நூற்றுக்கணக்கான பாடசாலைகளும் பல வைத்தியசாலைகளும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.
மாகாண அரசின் அதிகாரத்தை திட்டமிட்டு மத்திய அரசுக்கு பறிப்பதன் மூலம் மாகாண அரசின் நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் சதியாகவே இது அமைந்துள்ளது.
இவ்வாறான விடயங்களை மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை பொருந்திய ஒரே நாடு இந்தியா மட்டுமே என்பது யாவரும் அறிந்த விடயம்.
இதனை இந்திய அரசு செய்ய வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடராக வலியுறுத்தி வருவதும், அதற்கான பேச்சு வார்தைகளை இந்திய அரசின் தலைவர்கள் இந்திய தூதுவர்களுடன் இராஜதந்திரிகள் எல்லோரிடமும் பலமுறை கதைத்தும் ஆக்கபூர்வமாக எந்தப்பலனும் இதுவரை கிடைக்கவில்லை.
இறுதியாக கடந்த வாரமும் இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சந்திப்பிலும் மீண்டும் மீண்டும் அதனையே வலுயுறுத்தி எமது தலைவர்கள் பேசியுள்ளனர் பேசுவதை விட வேறு என்ன செய்ய முடியும்.
இதுவும் வழமை போன்று செய்திகள் பரபரப்பாய் தலைப்பு செய்திகளாக வெளிவந்தன.
இந்தியா தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறையாக இருப்பதாக பழைய வாக்கியமாகவே இதுவும் உள்ளதோ என்ற சந்தேகமே தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
ஒவ்வொரு சந்திப்பிலும் இந்திய இராஜதந்திரிகள் நம்பிக்கை ஊட்டும் விதமான கருத்துக்களை கூறினாலும் அது செய்திகளாக மட்டுமே காணப்பட்டது, செயல்வடிவில் இல்லை என்ற ஏக்கம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது என்பது உண்மை.
இருந்த போதும் தற்போதய இலங்கை அரசு இந்தியாவின் பல எதிர்புகளை மீறி சீனாவின் ஆதிக்க்த்தில் சென்று கொண்டிருக்கும் நிலையை உணர்ந்தாவது வடக்கு, கிழக்கு மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயங்களைக்கு விரைந்து செயல் வடிவில் அக்கறை காட்டவேண்டும் என மேலும் கூறியுள்ளார்.