இந்தியாவில் பதறவைக்கும் நிமிடங்கள்! சோகத்தில் மக்கள்
உலகின் பல நாடுகளிலும் கோவிட் தொற்று பரவலானது மீண்டும் தலைதூக்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவிலும் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கோவிட் தொற்று பரவலானது மீண்டும் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மருத்துவமனைகள் ஒட்சிசன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்ற கவலைக்கிடமான நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒட்சிசன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக டெல்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்ப்பிட்டல் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்குள் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயமாக இந்தியாவின் ஒட்சிசன் விவகாரம் காணப்படுகிறது.
இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் அதேவேளை, பல நாடுகளின் தலைவர்களும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கோவிட்டாலும் உயிர்கள் பலியாகி வரும் இந்த நிலையில் ஒட்சிசன் பற்றாக்குறையாலும் உயிர்களை காவு கொடுக்க நேர்ந்துள்ளமையானது மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அங்கு நிலைமை கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன.
பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
மயானங்களில் கூட்டம் மிகுதியாக உள்ளதாலும், இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், மக்கள் திறந்த மைதானங்களில் வைத்து கோவிட் நோயாளிகளின் உடல்களை எரியூட்டி வருகின்றனர்.
டெல்லியின் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும், மயானங்களில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் புகைப்படங்களும் காண்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.