இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படும்: எம்.நடராஜ் (Photos)
இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகவே வழங்கப்படுவதாகவும் எந்த பிரிவினையையும் இந்திய அரசாங்கம் பார்ப்பதில்லையெனவும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதவர் எம்.நடராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
விஜயம் செய்த துணைத்தூதுவரை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி தலைமையிலான குழுவினர் வரவேற்றுள்ளனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய துணைத்தூதுவர் நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
நிர்மாணிக்கப்படும் ஒன்றுகூடல் மண்டபம்
பல மில்லியன் ரூபா செலவில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அமைக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக குறித்த ஒன்றுகூடல் மண்டபத்தினை அமைப்பதற்கான செலவுகள் அதிகமாகவுள்ளதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையினை விட அதிகளவான செலவுகள் ஏற்படும் என்பது தொடர்பில் துணைத்தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் நிதியின் அளவினை அதிகரிக்க நடவடிக்கையெடுப்பதாக துணை தூதுவர் உறுதியளித்தார்.
அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைக்கு தேவையான உதவிகள் மற்றும் நிறுவகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கவும் துணைதூதுவர் உறுதியளித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த துணைத்தூதுவர், "சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்திற்கான திட்ட மொழிவுகள் எங்களுக்கு வந்துள்ளது.அந்த திட்டமுன்மொழிவுகளின் செலவுகள் தற்போதைய விலை அதிகரிப்பு காரணமாக அதிகரித்துள்ளது.
அதன்காரணமாக ஏற்கனவே வழங்கிய திட்டமொழிவினை எவ்வாறு கொண்டுசெல்வது என்பது குறித்து கலந்துரையாடினோம். அத்துடன் புத்தகங்கள்,இசைக்கருவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் அதனைப்பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடினோம்.
அத்துடன் நேற்று தமிழக அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன. இந்திய அரசாங்கம் இலங்கையில் எந்த மாகாணத்தினையும் பிரித்து பார்க்கவில்லை. இலங்கை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தமிழ் நாட்டின் நிவாரணங்கள் கூட இலங்கையின் அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடம் ஒன்றை அமைப்பற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் துறைத்தலைவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.