சாணக்கியனின் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அண்மையில் நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில், சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு, அந்த அறிக்கையை ஜனாதிபதிக்குக் கையளிக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவுக்கு விற்பனை செய்வதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் அகழப்படுவதாகச் சாணக்கியன், கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்தார்.
மாலைதீவில் தீவு ஒன்றை அமைப்பதற்காக இந்த மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் இதில் தொடர்புபட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், மாலைதீவிலுள்ள தீவை நிரப்புவதற்கு, இலங்கையிலிருந்து மணல் அனுப்பட்டுள்ளமை நிரூபிக்கப்படுமாக இருந்தால், அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயார் என இலங்கை சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.