மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு - அரசாங்க அதிபர் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோவிட் தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக பொது மக்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண சடங்கில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என மாவட்ட கோவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த ஒரு சில தினங்களாக கோவிட் - 19 தாக்கத்திற்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கின்றது.
இதன் காரணமாக உடனடியாக சில தீர்மானங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
நேற்றைய தினம் எமது மாவட்ட செயலணிக் கூட்டத்தில் பல்வேறு தரமான கருத்தாடல்களை உள்வாங்கி பொதுவான சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம். மாகாணப் பணிப்பாளரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
சகல வலயங்களிலும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் மாணவர்களை ஒன்றுதிரட்டி பரீட்சைகள் அல்லது ஏதாவது நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கான முன் அனுமதியைச் சுகாதார தரப்பினரிடமிருந்து பெற்ற பின்னரே பாடசாலைக்கு மாணவர்களை அழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இது மாணவர்களின் ஒன்றுகூடலைத் தவிர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். அத்துடன் சில சமூக விடயங்களிலே பொது மக்கள் ஒன்றுகூடும் பொழுது ஒரு புதிய கொத்தணி உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மரணச் சடங்குகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை ஒரே தடவையில் பதினைந்து பேராக மட்டுப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று திருமணச் சடங்குகளிலே பதினைந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியும். அதனைவிட கூடுதலானவர்கள் கலந்து கொண்டால் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலே சில ஆலயங்களிலே பக்தர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டார்கள். இதன் காரணமாக புதிய கொத்தணிகள் உருவாகும் என்ற ஐயப்பாடு பலரால் எழுப்பப்பட்டது.
இதன் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை மதஸ்தலங்களுக்குச் செல்கின்ற பொதுமக்களுக்கான அனுமதியை இடைநிறுத்தி நாளாந்த பூசைகள் மற்றும் மதக்கடமைகளிலே அந்த ஆலய மதகுருவும் நிர்வாகத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கடமைகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாடளாவிய ரீதியிலே கோவிட் பரவலின் அச்சுறுத்தல் பாரியளவில் எதிர்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்தினால் பல தீர்மானங்கள் நாளுக்குநாள் எடுக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களும் இதனை விளங்கிக்கொண்டு சுயகட்டுப்பாடுகளை தாங்களாகவே மேற்கொண்டு சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்து வீட்டை விட்டு வெளியேறாது இருந்தால் சுகாதாரத் துறையினருக்கும் ஏனையவர்களுக்கும் நாங்கள் உதவி செய்பவர்களாக இருப்போம்.
எனவே இந்த நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 220 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களில் 220, 235, 342, 189, 232 எனத் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்திற்கு முன்னர் நூறுக்குட்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




