தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகவும், மக்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள் மற்றும் புத்தாண்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரை நோக்கி திரண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சித்திரை புத்தாண்டு முன்னேற்பாடுகள்
மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்துள்ளன.

அதேபோன்று, நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நகருக்கு வரும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மாநகர சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும், அதிகளவான மக்கள் புத்தாண்டை வரவேற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நகரில் புத்தாண்டு வியாபாரமும் மக்கள் நடமாட்டமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கந்தளாய் நகரைச் சூழவுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக கந்தளாய் பிரதான வீதி மற்றும் வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
விலை நிலவரம்
புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட்டுள்ள மக்கள், தற்போதைய சந்தை நிலவரம் குறித்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இம்முறை மரக்கறி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக நுகர்வோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இது சாதாரண குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
அதேவேளை, மரக்கறி விலைகள் குறைந்திருந்தாலும், மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகமாக காணப்படுவதாக மக்கள் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக தகவல் - யூசுஃப்
யாழ்ப்பாணம்
தமிழ் - சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்கு மக்கள் நாடளாவிய ரீதியில் தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்து நாளை புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும், பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கொள்வனவு செய்வதில் நாங்கள் கஷ்டத்தை எதிர்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை எரிபொருள் விலையேற்றம், எரிவாயு விலையேற்றம் என்பன புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தடையாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
தமது வியாபாரம் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் வியாபாரம் சுமாராக இடம்பெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மேலதிக தகவல் - கஜீ