வடக்கு கிழக்கில் போதைப்பொருள் அதிகரிப்பது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்:சிறீதரன் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாணயக்கயிறு

மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து தொடர்பாக பொலிஸ், இராணுவம்,கடற்படை ஆகிய மூன்று தரப்பிடமே நாணயக்கயிறு காணப்படுகிறது.
போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள், விற்பவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிகளை பொலிஸார் கைது செய்வதில்லை.
பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது என்றால் அதனை தடுக்கின்ற வல்லமை கடற்படையிடம் உள்ளது. பொலிஸ் இராணுவம் இங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
விழிப்புணர்வு நடவடிக்கை
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து போதைப்பொருள் பாவனை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன் மதகுருமார்கள் மதஸ்தலங்கள் ஊடாக போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கில் உள்ள பெற்றோர், மதகுருமார், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படும்போதே போதைப்பொருள் பாவனையை தடுக்கமுடியும்.
பொருளாதார வீழ்ச்சி
இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைக்கு, கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தான் காரணம்.
இதனால் தான் தற்பொழுது மக்கள் இவ்வாறு கஷ்டத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும். பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய ராஜபக்ச குடும்பத்தினர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
சீனி மோசடி, உர இறக்குமதியில் மோசடி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.
மேலதிக செய்தி-கஜிந்தன்