பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது - பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் வெளியேற்றம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
342 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 172 வாக்குகள் தேவை என்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையை 174 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒனபதாம் திகதி நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றின் உத்தரவுப்படி நள்ளிரவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் கூடியது.
இதன் போது யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைக்கால சபாநாயகரை நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தின.
இதில் இம்ரான்கான் தோல்வி அடைந்தார். இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.
இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.