ஐ.எம்.எஃப் இன் பிணையெடுப்பு அங்கீகாரம் சாத்தியமில்லை! சிக்கலில் இலங்கை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை பெற கிழக்கு நோக்கி சென்றபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் நகர்வுகள் இலங்கைக்கு சாதகமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
பிணையெடுப்பு பொதி
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கைக்கான பிணையெடுப்பு பொதியை சர்வதேச நாணய நிதியம், விரைவாக முன்வைக்கும் என்ற நம்பிக்கை தற்போது மந்த வேகத்தில் செல்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் அல்லது சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளை இலங்கை தற்போது வரையில் நிறைவேற்றவில்லை அல்லது நிறைவேற்றுவதில் தாமதித்து வருகின்றது.
குறிப்பாக இலங்கை கடன்பட்டுள்ள நாடுகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன்களை மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் கூறியிருந்தது.
நிர்வாகக் குழுவின் அனுமதி
எனினும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே எதிர்வரும் நவம்பரில் கூட இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணையெடுப்புக்கான சர்வதேச நாணய நிதிய நிர்வாகக் குழுவின் அனுமதியை பெறமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனை சீர்செய்யும் வகையில் அடுத்த வாரம் இலங்கையின் மத்திய வங்கிக்குழு வோசிங்டனுக்கு செல்லவுள்ளது. எனினும் முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் எந்த உறுதிமொழிகளும் இன்னும் இலங்கைக்கு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இந்தியாவும் ஜப்பானும் தமது கடன் மறுசீரமைப்பு விருப்பங்களை ஏற்கனவே தெரிவித்து விட்டன. ஆனாலும், சீனா இந்த விடயத்தில் உடன்படாது போனால் ஏனைய இரண்டு நாடுகளும் மறுசீரமைப்பை மேற்கொள்வதில் எந்த பயனுமில்லை.
மறுசீரமைப்பு
எனவேதான் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை பெறுமாறும் இந்த மறுசீரமைப்புக்கு எப்போதும் தாம் தயாராக இருப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கவனம் அண்மையில் ஏற்பட்ட உலக பொருளாதார நிலையை நோக்கி திரும்பியுள்ளது.
டொலர் திடீரென வலுவடைந்து சீனா மற்றும் ஜப்பானிய பொருளாதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் பிரித்தானியாவின் பவுன்ட்ஸ் பெறுமதி வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறான பொருளாதார சூழ்நிலையில் இலங்கை பயணிப்பது இலகுவானதாக
இருக்கப்போவதில்லை என்றும் ஆங்கில இதழின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.