மனைவியின் சொத்துக்களால் செல்வந்தனானேன்..! நாமல் தெரிவிப்பு
தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் தம்மை விடவும் மிகவும் செல்வந்தர்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புண்ணியம் செய்தமையினால் மனைவியின் ஊடாக அபிவிருத்தி அடைய கிட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்ற சொத்துக்கள்
தமக்கு எதிராக முறைப்பாடு செய்த மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமைச்சர்களின் சொத்துக்களுடனும் ஒப்பீடு செய்யும் போது இந்த விடயம் நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இரவு கூட்டங்களுக்கு செல்லும்போது ஊரில் உள்ளவர்கள் தமது சட்டை பைக்குள் 5000 ரூபாய் வழங்குவதாகவும் எரிபொருள் வழங்குவதாகவும் ஊடகங்களிடம் கூறிய நபர்கள் தம்மை விட சொத்துக்களை வைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமக்கு எதிராக குற்றம் சாட்டும் நபர்கள் தனது மனைவியின் சொத்துக்களையும் தமது சொத்துக்களையும் பிரித்தறிந்து கொள்ள முடியாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமக்கு இன்னமும் 39 வயது மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தமது பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெற்ற சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சொத்து விபரங்களில் உள்ளடக்கியுள்ளதாகவும் சட்ட விரோதமாக சொத்துக்களை கொள்வனவு செய்ததில்லை எனவும் மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட விடயங்களில் முதலீடு செய்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியாக தாம் செயல்பட்டுள்ளதாகவும் ஆலோசனை சேவை வழங்கியுள்ளதாகவும் அதற்காக வரி செலுத்தி உள்ளதாகவும் வரி அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினரிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் கிடைக்கப் பெற்ற சொத்துக்கள் தொடர்பிலும் தான் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வசந்த சமரசிங்க பெரும் செல்வந்தர்
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களின் போது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ராஜபக்சக்களை பெரும் முதலாளித்துவ பிரதிநிதிகள் என குற்றம் சுமத்திய நபர்கள் தற்பொழுது பெரும் செல்வந்தர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களது சொத்துக்கள் தமது சொத்துக்களை விடவும் அதிகமானது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சொத்து அதிகரிப்பானது ஓராண்டில் இடம் பெற்றதா? அல்லது 76 ஆண்டு கால சாபத்தின் போது திரட்டப்பட்டதா? என தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தோழர் வசந்த சமரசிங்க தம்மை விடவும் செல்வந்தர் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
