மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கணவர் நேற்று மாலை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குடும்ப தகராறை தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவு
இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவி மீது கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.

தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சந்தேகநபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14