சஜித்திற்கு பைசர் தடுப்பூசி எப்படி சாத்தியம்? சர்ச்சையை கிளப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பைசர் கோவிட் தடுப்பூசி எவ்வாறு வழங்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல, இலங்கையில் இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை சஜித் பிரேமதாச எவ்வாறு பெற்றுக்கொண்டார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார். வைத்தியர்களின் கடுமையான ஆலோசனைகளின் அடிப்படையில் தாம் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக சஜித் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கோவிட்தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாவிட்டால் மீண்டும் தொற்று ஏற்பட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியதனால் தாம் தடுப்பூசி ஏற்றிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதனை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சஜித் பிரேமதாசவுக்கு பைசர் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியே வழங்கப்பட்டதாகவும், இலங்கையில் இதுவரை பைசர் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பைசர் தடுப்பூசியை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் தாம் ஆச்சரியமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.