வடக்கு பகுதியில் சீன வீட்டுத் திட்டம்: யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை
வடக்கு பகுதிக்கு சீனாவினால் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கங்களை அடைவதற்கான திட்டங்களாக அமையக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (14.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வீடு அமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காகச் சீன அரசாங்கம் பாரிய நிதி ஒன்றை வழங்கவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
2,500க்கும் மேற்பட்ட வீடுத் திட்டங்கள்
சீன அரசாங்கம் உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், வடபகுதியில் அரசியல் நோக்கங்களுக்களை அடைவதற்காகத் திட்டங்களை வழங்குவது எமது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 2,500க்கும் மேற்பட்ட வீடுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் கிடப்பில் இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய தற்போதைய அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை எனக் காரணம் கூறும் நிலையில், மழைக் காலங்களில் குறித்த வீட்டில் வசிப்போர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
வடக்கு பகுதியில் வீட்டுத் திட்டம்
ஆனால், தற்போது சீனா வீட்டுத் திட்டத்தை வழங்கப்போகிறது என அமைச்சர் கூறும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூரணப்படுத்தாதவர்களுக்கு ஏன் சீனாவின் நிதியை வழங்க முடியாது.
வடக்கு பகுதி கடற்கரையோரங்களைச் சீனா இலக்கு வைத்து அயல் நாடான இந்தியாவுக்கு சவால் விடுவதற்கு எமது மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தக் கூடாது.
ஆகவே, வடக்கு பகுதியில் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு முழுமை பெறாத விவரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்று அவர்களின் வீட்டுக்களை முழுமைப்படுத்த உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |