புதிய பத்திக் பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு! - பிரதமர் வெளியிட்ட நம்பிக்கை
புதிதாக நிறுவப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாகும் என தான் நம்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 160 பத்திக் மற்றும் உள்ளூர் ஆடை தொழிற்சாலை பயிற்சி நிலையங்களை அலரி மாளிகையிலிருந்து இன்று இணையவழி ஊடாக குறியீட்டு ரீதியாகத் திறந்து வைத்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஒபேசேகர எசல விளையாட்டு மைதானத்தின் அருகே நிறுவப்பட்ட பயிற்சி நிலையமும் குறியீட்டு ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவும் கலந்து கொண்டுள்ளார்.
பத்திக் பயிற்சி உற்பத்தி செயற்பாடு தொடர்பிலான ஆவணப்படமும் இதன்போது ஒளிபரப்பப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,
எமது நாட்டிற்கு வண்ணமயமான கலாசாரம் போன்றே வண்ணமயமான வரலாறும் காணப்படுகிறது. நமது நாடு பல இனக்குழுக்கள் மற்றும் மதங்களை உள்ளடக்கிய நாடாகும்.
நம் மக்களின் எண்ணங்கள், அபிலாஷைகள், வாழ்க்கை முறைகள் மற்றும் நாகரிகங்கள் மிகவும் வண்ணமயமானவை. நம் நாட்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, கைத்தறி ஆடைகள் மிகவும் பிரபலமாக இருந்தன.
ஆனால் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து வெளிநாட்டு ஆடைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான விடயம் என்னவென்றால், நமது உள்ளூர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
திறந்த பொருளாதாரம் எமது நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட போது உள்ளூர் விடயங்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் அப்போது இருக்கவில்லை. அதன் விளைவுகளைப் பல தசாப்தங்களாக அனுபவித்து வருகிறோம்.
எனவே, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, அந்த உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதில் நாம் இன்னும் சவாலை எதிர்நோக்குகின்றோம். கைத்தறி ஆடை தொழில் வளர்ச்சியடைந்து வந்த அந்த பொற்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே நாம் தனியான இராஜாங்க அமைச்சைக் கூட உருவாக்கினோம்.
அந்த அமைச்சிற்கு தயாசிறி போன்றதொரு அமைச்சரை மிகுந்த நம்பிக்கையுடன் நியமித்தோம். அமைச்சர் தயாசிறி போன்றே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதை நாம் அறிவோம்.
அரசாங்க ஊழியர்களுக்கு உள்ளூர் ஆடைகளை அணிவிப்பதற்கு பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்கள். வாரத்தில் ஒரு நாள் பத்திக் உடை அணிவதற்கான நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது.
இந்த விடயங்கள் கோவிட் மூலம் மறக்கடிக்கப்பட்டாலும், அதன் மூலம் சமூகத்திற்கு வழங்கும் செய்தி முக்கியமானது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். அது மாத்திரமன்றி வெசாக் பண்டிகையை முன்னிட்டு பத்திக் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டன.
புத்தாண்டு தினத்தன்று மக்கள் பத்திக் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்பட்டனர். மக்கள் விருப்பத்துடன் அவ்விடயங்களை முன்னெடுப்பதைப் பார்த்தோம். இவை ஊடாக நாட்டில் பத்திக் ஆடை அணிவதும், பத்திக் அலங்காரங்களுக்குமான அலை ஏற்பட்டது என்பதை நாம் அறிவோம்.
ஜனாதிபதி இவ்வாறு தனியான அமைச்சை நிறுவியமை குறித்து அன்று பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த விடயங்கள் இன்று சமூகத்தைச் சரியான வழியில் மாற்றியமைத்துள்ளன என்று நாம் நம்பிக்கையுடன் கூறலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உள்ளூர் தொழிற்துறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம்.
சில காலங்களில் இந்தத் தொழிற்துறைகள் குறித்துக் கண்கொண்டும் பார்க்கப்படவில்லை. இவற்றை நம்பி வாழும் மக்களைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமின்றி, ஒரு நாடு என்ற ரீதியில் சர்வதேசத்தின் முன் எழுந்து நிற்கும் வாய்ப்பை இழந்து, உள்ளூர் ஆடை தொழிற்துறை வீழ்த்தப்பட்டது.
அத்தகையதொரு தொழிற்துறையைத் தான் நாம் தற்போது புத்துயிர் பெறச் செய்து சர்வதேசத்தை வெல்வதற்காகச் செயற்படுத்துகின்றோம். அதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது.
அந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இன்று நாடு முழுவதும் 160 பத்திக் மற்றும் உள்ளூர் ஆடை தொழிற்சாலை பயிற்சி நிலையங்களை அமைப்பதாக அமைச்சர் என்னிடம் கூறினார்.
இத்தொழிற்துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்குத் தரமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ஏன் பிற நாடுகளிலிருந்து வேறுபடுகிறோம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அந்த சவாலை எதிர்கொள்வது நீங்கள் நினைப்பது போல் எளிதான விடயமல்ல. நம் நாட்டிலிருந்து தொலைந்து போகவிருந்த இந்தத் தொழிற்துறையானது, பாரம்பரியமாக இத்தொழிலில் நீடித்து வந்த வெகு சிலராலினாலேயே காப்பாற்றப்பட்டது.
எத்தகைய தடைகளையும் சகித்துக் கொண்டு இந்த அளவிற்கு இத்தொழிற்துறையைக் காக்க முன் வந்தனர். அவர்களை நாம் மறக்காமல், அவர்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்று அமைக்கப்படும் பயிற்சி நிலையங்கள் ஊடாக தொழில்துறை பற்றிய அறிவூட்டல்களை வழங்கி, படைப்பாளர்களை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.
எதிர்காலத்தில் இத்தொழில்துறைக்கு நாட்டில் பெரும் மதிப்பை உருவாக்குவதனை நாம் உறுதி செய்வோம். பாடசாலை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான சீருடைகளை வழங்குவதற்கான பெரும்பாலான பொறுப்பை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்கிறோம்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அமைந்துள்ள மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து அரச நிறுவனங்களுக்குத் தேவையான பத்திக் உள்ளிட்ட உள்ளூர் ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை நாங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம்.
எமது கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எனக்கு ஞாபகமுள்ளது. குறிப்பாகக் கைத்தறி மற்றும் பத்திக் ஆடை இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் உள்ளூர் ஆடை உற்பத்திக்கான தடைகளை நீக்க முடிந்தது.
நமது நாட்டின் ஆடைகளுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இத்துறையைச் சர்வதேச அளவில் முன்னேற்றுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்குத் தரமான நிறைவை வழங்குவது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அவற்றைத் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிப்பது அவசியம்.
இவற்றைச் சரியாகக் கற்றுக்கொள்வதன் மூலம் நம் பிள்ளைகளும் ஒருநாள் இத்துறையில் தொழில்முனைவோராக முன்வர முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தியை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிவது நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
குறித்த நிகழ்வில் பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara), பத்திக், கைத்தறி துணிகள் மற்றும்
உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி,
மேலதிக செயலாளர் (நிர்வாகம்) டீ.நந்தனி சமரவிக்ரம, மேலதிக செயலாளர்
(அபிவிருத்தி) சுஜீவா ஜீ பள்ளியகுருகே, லங்கா சலுசல நிறுவனத்தின் தலைவர்
டென்சில் பெரேரா, லக்லச நிறுவனத் தலைவர் லக்மால் விக்ரமாராச்சி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டுள்ளனர்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam