சிறுமி ஹிஷாலினியின் சரீரம் பெற்றோரிடம் மீள கையளிப்பு
இரண்டாவது மரண பரிசோதனைக்காக மீள தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம் அவரது பெற்றோரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் உயிரிழந்த டயகம பகுதியினை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது மரண பரிசோதனைக்காக கடந்த 30 ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்பட்டது.
சிறுமி ஹிஷாலியினின் சரீரரத்தை மீள தோண்டி இரண்டாவது மரண பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய இரண்டாவது மரண பரிசோதனைக்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட வைத்தியர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் பிரதானியாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நீதிமன்ற வைத்தியத்துறை தொடர்பான பேராசிரியர் ஜின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த குழுவினரால் கடந்த நாட்களில் பேராதனை வைத்தியசாலையில் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்,இரண்டாவது மரண பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது சரீரம் இன்று பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







