ரணிலுக்கு கிடைக்க வேண்டிய கௌரவம் பற்றி கூறும் ஹர்ச டி சில்வா
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவி வகித்த போது கொழும்பு துறைமுக நகரில் 20 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக வழங்க எடுத்திருந்த தீர்மானத்தை இரத்துச் செய்தமைக்கான முழுமையான கௌரவம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கு தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்கி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இணங்க வைத்து, அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த காரியத்தை செய்தார் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஹர்ச டி சில்வா, ரணில விக்ரமசிங்கவின் இந்த செயலை பாராட்டினாலும் அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
கொழும்பு துறைமுக நகரம் சம்பந்தமான சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.இந்த சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிவில் அமைப்பினர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.