நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை..
முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று அதிகாலை கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற இத் தொழுகைக்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொழுகையையும் ஜும்ஆ பிரசங்கத்தையும் அஸ்-ஸெய்ஹ் மௌலவி எஸ். எம். முனீர் பலாஹி நடாத்திவைத்தார்.
கந்தளாயில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, கந்தளாய் இலாஹியா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் பேராற்று வேலி ஜும்மா பள்ளிவாசல்களில் இன்று காலை 6.30 மணியளவில் விசேட பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.
இலாஹியா ஜும்மா பள்ளிவாயலின் பிரதம இமாம் அஷ்ஷெய்க் ஏ. நாபில் அஸாதி அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி வைத்ததுடன், ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவம் மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகளை எடுத்துரைக்கும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

மேலும், நாட்டில் நிரந்தர சமாதானமும் நிலையான அபிவிருத்தியும் நிலவ வேண்டுமென இறைவனிடம் விசேட துஆ பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தொழுகைக்காக கந்தளாய் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகையைத் தொடர்ந்து, மக்கள் ஒருவருக்கொருவர் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.
உலக வாழ் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நிலையில் மன்னார் மாவட்ட இஸ்லாமியர்களும் ஹஜ் பெருநாளை கொண்டாடி உள்ளனர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
அஷ்ஷெய்க் T.M .தஸ்னீம் மௌலவி தலைமையில் குறித்த திடல் தொழுகை இடம் பெற்றது.அதனை தொடர்ந்து 'இறைத்தூதரின் தியாகம்' எனும் தலைப்பில் பெருநாள் பிரசங்கம் இடம் பெற்றது.
தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றது.
மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில் நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கம் என்பவற்றை மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு பிரத்தியோகமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









