துப்பாக்கிதாரியை விரட்டியடித்த வீட்டு உரிமையாளர்!
தன்னைச் சுட முயன்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, வீட்டு உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தி அவரைப் பொலிஸாரிடம் சிக்க வைத்துள்ள அதிரடிச் சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது.
களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர், பாதிக்கப்பட்ட நபரிடம் 30 ஆயிரம் ரூபா கடன் பெற்றிருந்தார்.
அந்தக் கடனைத் திருப்பித் தருவதாகக் கூறி, அவர் மற்றொரு நபருடன் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
பதில் தாக்குதல்
இதன்போது, அவருடன் வந்த இனந்தெரியாத நபர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளர் மீது சூடு நடத்த முயற்சித்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத இந்தத் தருணத்தில் நிலைகுலையாத வீட்டு உரிமையாளர், அருகில் இருந்த நாற்காலியால் துப்பாக்கிதாரியை பலமாகத் தாக்கியதுடன், வீட்டிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அவர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் இந்த ஆவேசமான எதிர்த்தாக்குதலை எதிர்பார்க்காத துப்பாக்கிதாரி, காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.
கைது
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு, காயமடைந்த நிலையில் இருந்த துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு