கல்லடி கரைவலையில் அகப்பட்ட துப்பாக்கி - பல கோணங்களில் விசாரணை
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியில் நேற்று மீனவர்கள் கரை வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வலையில் மீன்களுடன் துப்பாக்கியொன்று அகப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு மீனவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த துப்பாக்கியானது கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்குப் பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரை வலையிலேயே அகப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட துப்பாக்கி ரி56 ரக துப்பாக்கியென இனங்கண்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கியினை எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், குற்றச்செயல்களுடன் ஈடுபட்ட எவரேனும் கடலில் வீசி விட்டுச் சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.