மட்டக்களப்பு படகுப்பாதையில் கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாது!ஆசிரியர்கள் ஆதங்கம்(video)
மட்டக்களப்பு - குருக்கள்மடம் அம்பிளாந்துறையில் சேவையில் ஈடுபடும் படகுப்பாதையில் கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாது என ஆசிரியர்கள் தெரிவித்ததையடுத்து பாதை போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இன்று (17.04.2023) குருக்கள்மடம் துறையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை படகுப்பாதையில் செல்வதற்கு ஒருவருக்கு 50ரூபா வீதம் அறவிடப்பட்ட நிலையில் படகில் செல்வதற்கு ஏறிய ஆசிரியர்கள் அதிலிருந்து இறங்கியுள்ளதுடன் எம்மிடம் நிதி வசூலிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் இப்படகு பாதையூடாக எதுவித கட்டணங்களுமின்றியே தொலை தூரம் பிரதேசங்களுக்கு பயணம் செய்து மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றோம்.
அத்துடன் தற்போதைய வாழ்க்கை செலவுகளுக்கு மத்தியில், எமக்கு அரசாங்கத்தால் மாதாந்தம் வழங்கப்படும் வேதனமே போதாது. “எமது புனிதமான தொழிலை அரசாங்கம் புதினமாகப் பார்ப்பது எமக்கு கவலையளிக்கின்றது” என கூறியுள்ளனர்.
இதேவேளை கடந்த 10 வருடங்களாக நீண்டதூரம் பணயம் செய்து சிரமத்திற்குள்ளாகி மாணவர்களுக்கு நாம் கல்வி புகட்டி வருகின்றோம்.
ஆனால் நாம் பயணிக்கும் படகு பாதைக்கு கட்டணம் அறவீடு செய்யதால் நாம் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்று செல்ல நேரிடும்.
கட்டணம் அற்ற சேவை
எனவே இதுவரை காலமும் நடைமுறையிலிருந்தது போல் எவ்வித கட்டணங்களுமின்றி பயணம் சேவையை தொடர்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இது தொடர்பிலான திட்டங்களை எமது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் எனவும் ஆசிரியர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த அரச உத்தியோகத்தர்கள், கட்டணம் செலுத்தி இப்பாதையில் பயணம் செய்ய முடியாது என தெரிவித்து கடமைக்குச் செல்லாமல் வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர்.
குறித்த படகு பாதை போக்குவரத்து சேவையானது, சேவையில் ஈடுபடாமல் காலை 9 மணிவரையில் தடைப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி - குமார்