அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது - திலித் ஜயவீர
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை, 'சர்வஜன பலய' பிரதிநிதிகள் குழுவினருடன் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்ர்.

இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஒரு தீர்க்கமான நபராக இருந்தார் என தெரிவித்துள்ளார்.
அந்தப் பங்களிப்பிற்காக அவர் முதலில் மக்களின் மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர். அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி' என்ற அதே சட்ட உரிமை அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தது எனவும் இது தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு சட்டம் என்பதை அவர்களே சுட்டிக்காட்டினர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பயன்படுத்தி இந்தச் சட்டம் மிகக் கொடூரமான முறையில் கையாளப்படுதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சியாக, இதற்கு எதிராக தேசிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில், இந்தச் சூழ்நிலையை இனிமேலும் தொடர அனுமதிக்க முடியாது என் திலித் ஜயவீர ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.