செயலிழந்த அரச இணைய சேவைகள்: விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு
சுமார் 8 துறைகளை பாதித்த இணையவழி அரச சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதற்காக தொடர்புடைய அதிகாரிகளின் சிறப்புக் கூட்டம் இன்று (14) நடத்தப்படவுள்ளது.
குறித்த சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இணையவழி சேவைகள்
இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் வழங்கப்படும் இணையவழி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சேவைகளில், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (BMD) சான்றிதழ் வழங்கும் அமைப்பு, மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (மேல் மாகாணம் தவிர்ந்த) இணையவழி வருமான வரி அனுமதிப் பத்திர முறைமை (eRL 2.0), பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு, வர்த்தகத் திணைக்களத்தின் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டுக்கான சான்றிதழ் வழங்கும் இணையவழி அமைப்பு, ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதியக் கட்டமைப்பு, இ-உள்ளூராட்சி அமைப்பு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நிறுவனப் பதிவாளர் திணைக்களம், இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் இணையத்தளங்களும் அடங்குகின்றன.
வழமைக்கு கொண்டு வர முயற்சி
இதேவேளை, சான்றிதழ் பிரதிகளை, சம்பந்தப்பட்ட மூலச் சான்றிதழ்களை வழங்கிய பிரதேச செயலகத்திலிருந்து, தகவல் முறைமைகளின் உதவியின்றி (Manually) பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இணையவழிச் சேவைகளை விரைவில் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என மீண்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



