இனவாதம் பேசி ஆட்சிக்கு வந்து மக்கள் எதிர்ப்பினை உருவாக்கிய அரசாங்கம்! பழனி திகாம்பரம்
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திற்குள்ளேயே மக்கள் எதிர்ப்பினை உருவாக்கிக்கொண்ட நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் ஏமாற்றம் தரும் வரவு செலவு திட்டமாகவே காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறி, இனவாதம் பேசி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தங்களது சுயரூபத்தினை காட்ட தொடங்கியுள்ளது.நாட்டு பற்று உள்ளவர்கள் போல் பேசினாலும் நாட்டுக்கான நல்லவை நடப்பதாக இல்லை.
இன்று பெரும்பான்மையான மக்கள் அரச எதிர்ப்பு பக்கமே உள்ளனர்.இன்று எல்லா துறை சார்ந்தவர்களும் தங்களது உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் போராடும் நிலைமையே காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் நாங்கள் முன்னெடுத்த மக்கள் பணி எல்லாமே கிடப்பில் போடப்பட்டுள்ளது.மலையகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கத்தில் முன்னெடுத்தோம்.
மலையகத்தில் புதிய கிராமங்கள் 225க்கு மேற்பட்டு உருவாக்கி புதிய கிராம புரட்சியினை உருவாக்கினோம். பிரதேச சபைகளை அதிகரித்தோம்.
மலையகத்திற்கு சேவை செய்வதற்காக புதிய அதிகார சபையினை உருவாக்கினோம்.ஆனால் அதனை கொண்டு நடாத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரிக்க முயற்சித்து வர்த்தமானியும் வெளியிடப்பட்டுவிட்டது.ஆனால் அதிகரிக்கப்பட்ட பிரதேச செயலகங்களை இன்றுவரை இந்த அரசாங்கம் இயங்கு நிலைக்கு கொண்டுவரவில்லை.
அம்பகமுவ, நுவரெலியா பிரதேச செயலகங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள்.அவர்களுக்கான அரச வளங்கள் இதன் காரணமாக முறையாக சென்றடைவதில்லை. அதற்காகவே பிரதேச செயலகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.
எனவே இந்த அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரதேச செயலகங்களை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டுமென வர்த்தமானி வெளியிட்டது.
இந்த அரசாங்கத்தின் எல்லா வர்த்தமானிகள் போலவே இதுவும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.தொழிலாளர்களுக்கு இன்று வரையும் முறையாக சம்பளம் கிடைக்கவில்லை.மாறாக முகாமைத்துவங்களின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.
JEDB, SPC கம்பனிகளில் மதாந்த கொடுப்பனவுகள் எதுவுமே சரியான திகதியில் வழங்கப்படுவதில்லை. இத்தகைய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் கண்டு கொள்வதும் இல்லை.
பெருந்தோட்ட கம்பனிகளை ஊக்குவிக்கும் அதேவேளை, திருப்தி அளிக்காத, 1000 ரூபா சம்பளம் வழங்காத பெருந்தோட்ட கம்பனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக வரவு செலவு திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மாற்று முதலீடுகள் என்ற பெயரில் பெருந்தோட்ட காணிகளையும், வெளியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது.பெருந்தோட்ட மக்களை பாதிக்காத வகையில் முதலீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
நாட்டில் தற்போதைய நிலை காரணமாக உணவு பொருட்களுக்கு தட்டுபாடு நிலவகூடும்.உரம் இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய பஞ்சம் கூட ஏற்படலாம்.
எனவே, இந்த அரசாங்கம் இத்தகைய பிரச்சினைகளை வரட்டு பிடிவாதம் பிடிக்காமல் மக்களின் அபிலாசைக்கு ஏற்ற வகையில் தீர்க்க வேண்டும்.
இந்த அரசாங்கம் மீதி இருக்கின்ற காலப்பகுதியிலாவது மக்கள் ஆட்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது.
கோவிட் என்பதை காரணம் காட்டினாலும் இன்று இலங்கை போன்ற அபிவிருந்தி அடைந்து வரும் நாடுகள் பொருளாதார ரீதியில் ஸ்திர தன்மையை அடைந்துள்ளது.
இலங்கை மட்டுமே கோவிட்டினை காரணம் காட்டி மக்களின் வாழ்வாதார செலவினத்தை அதிகரிக்கிறது.இன்று அத்தியாவசியமான பொருட்களின் விலை என்பது அரசாங்கத்தின் கைமீறி சென்றுள்ளது.
அரசாங்கம் அல்லாத இறகுமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையினை தீர்மானிக்கும் நிலைதான் உள்ளது. இதற்கு அரசாங்கத்தின் இடை தரகர்களும் காரணம்.இந்த வரவு செலவு திட்டத்திலாவது ஏதாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
தற்போது அரசின் செயற்பாடுகளுக்கு அரசின் பக்கமிருந்தே எதிர்ப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. எனவே எதிர்வரும் காலத்திலாவது அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.