தன்னிச்சையாக பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ள அரசாங்கம்
எரிபொருள் பற்றாக்குறையை முன்னறிவித்த, தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அரசாங்கம் தன்னிச்சையாகவே பழிவாங்கும் படலத்தை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக தொழிற்சங்கத் தலைவர்களை தன்டனைக்குட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி அன்று எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில், எதிர்க்கட்சி முதல் முதலாக வெளிப்படுத்தியது, அதனைத் தொடர்ந்து, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டர் செய்தியை வெளியிட்டு எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
எரிபொருள் தொடர்பாக இத்தகைய சூழ்நிலையை நிலவும் போது இத்தகைய கணிப்பைச் செய்த ஆனந்த பாலித கைது செய்யப்பட்டதன் நோக்கம் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.
இந்தநிலையில் ஆனந்த பாலிதவை பொய்யான அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ள அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வெளியிட்ட பொய்யான அறிக்கைகளை நாம் திரும்பிப் பார்த்தால், அரசாங்கத்தின் 90% க்கும் அதிகமான உறுப்பினர்கள், கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தல் நாட்டிற்குள் நுழையலாம் என்று கடந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி அன்று எதிர்க்கட்சி வலியுறுத்தியது. எனினும் இலங்கைக்கு அத்தகைய ஆபத்து இல்லை என்றே அரசாங்கம் கூறியது.
அதே ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி, கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக "முகக்கவசங்களை" மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று தாம் அரசாங்கத்திடம் கூறியபோது, அப்போதைய பொறுப்பான அமைச்சர், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசங்கள் அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் போது, பொறுப்புள்ள அமைச்சர்கள் முட்டிகளை ஆறுகளில் வீசியதுடன் அனுமதியற்ற பானிகளை கொண்டு நாடாளுமன்றத்தில் கூட பிரசாரம் செய்தனர்.
கொவிட் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, கடந்த மே 17 ஆம் திகதி அன்று இலங்கையில் சுகாதாரப் சேவைகள் துறைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலை அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பியிருந்ததுடன், அரசாங்கத்திடம் நிதியில்லை எனத் தெரிவித்து பொதுமக்களிடம் ஆதரவு கோரி இருந்தார்.
எனினும் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி அன்று, ஒரு முக்கிய அரசாங்க அமைச்சர் அரசாங்கத்திடம் போதுமான பணம் இருப்பதாக கூறினார்.
கடந்த மே 23 ஆம் திகதி அன்று, மற்றொரு அமைச்சர் அரசாங்கத்திடம் போதுமானளவு பணம் இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் இந்த முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்ட அமைச்சர்கள் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுத்தது என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
2021, மே 4 ஆம் திகதி, டோசிலிசுமாப்(Tocilizumab) மருந்து இல்லாமை பற்றி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திற்கு நினைவூட்டியதுடன் , கடந்த செவ்வாய்க்கிழமை (17) நாடாமன்றத்தில் இது குறித்து மீண்டும் இதயசுத்தியுடன் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தியபோது, அரசாங்க அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட மருந்துக்கு பற்றாக்குறை இல்லை என்று கூறினார்.
உண்மை நிலை என்னவென்றால், அந்த மருந்து உண்மையில் இந்த நாட்டில் இல்லை என்பதாகும். எனவே, முழுமையான பொய்மையை மற்றும் நம்பகத்தன்மையின்மையிலான கருத்தியல்களை வெளிப்படுத்திய அடிப்படையில் அரசாங்கத்தில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக, நாட்டுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அவதானங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துபவர்கள் அல்ல என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.