நல்லூர் ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய நிர்வாக விவகாரம்! மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம்-நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்திற்கு பொதுமுகாமைத்துவம் ஒன்றினை அமைத்து நிர்வகிப்பதற்கு ஆவணம் செய்யுமாறு கோரி மனு ஒன்று நல்லூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை யார் சுழற்சிமுறையில் நடத்துவதென இரு பூசகர்களிடையே முரண்பாடு இடம்பெற்றது.
மனு கையளிப்பு
இதன் காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக வேண்டிய மகோற்சவம் உரிய நேரத்தில் ஆரம்பமாகாது தடைப்பட்டு பின் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மீண்டும் மாலையே ஆரம்பமானது.
பல நாட்களாக ஆலயத்தில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக ஆலய மகோற்சவ உபயகார்கள், ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளும் பொதுமக்கள் இணைந்து, வீரமாகாளி அம்மன் ஆலயத்தினை நிர்வகிப்பதற்கு பொது முகாமைத்துவத்தினை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்சியாக திருவிழாவினை தடையின்றி நடத்துவதற்கு ஆவணம் செய்யுமாறும் கோரி நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகத்திடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
குறித்த மனு தொடர்பில் நல்லூர் பிரதேச செயலகத்தினால், ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் 3 குடும்பங்களிடமும் தற்போது தனித்தனியாக அபிப்பிராயம் பெறப்படவுள்ளது.
ஆலய மகோற்சவம் முடிந்ததும் பொது முகாமைத்துவத்தினை அமைப்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூசகர்களுக்கிடையில் உருவாகிய முரண்பாட்டால் மகோற்சவத்தின் ஆரம்ப தினத்தில் ஆலயம் பூட்டப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெறாது மக்கள் ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த அவலம் நடைபெற்றுள்ளது.
இதுபோன்று மீண்டும் ஒருமுறை நடைபெறாதிருக்க உரிய அதிகாரிகள் ஆவணம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
