கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா அக்டோபர் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினர்கள்
இவ்விழாவின் முதல் நாளில் பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி மற்றும் இரண்டாம் நாளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 1966 உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதலாம் நாளில் நடைபெற்ற மூன்று அமர்வுகளின் போது மொத்தமாக 985 மாணவர்களுக்கு - விவசாயம், கலை, வணிக முகாமைத்துவம், அழகியல்கற்கைகள், மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் சித்தமருத்துவம் ஆகிய துறைகளில் முதுமாணி மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டன.
பட்டம் வழங்கல்
அதேபோல், இரண்டாம் நாளில் நடைபெற்ற மூன்று அமர்வுகளின் போது 981 மாணவர்களுக்கு - வணிக முகாமைத்துவம், தொழிநுட்பம், அழகியல்கற்கைகள், பிரயோக விஞ்ஞானம், தொடர்பாடல் முகாமைத்துவம், கலை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு, இரண்டு நாட்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழா மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் நிறைவடைந்தது.








