நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ படுகொலை விவகாரம்: நாமலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி
புதிய இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவ என்ற போதைப்பொருள் கடத்தல்தாரி இன்றையதினம் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
''இன்று நாடாளுமன்றில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் எதிர்தரப்பினர் கவலையடைய வேண்டாம்.
இவ்வாறான கொலைகளை தமது முறைமையாக, கலாச்சாரமாக கொண்டு வந்தவர்கள் இன்று எங்கள் அரசாங்கத்தை பார்த்து தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாங்கள் கவலை அடைகின்றோம். மேலும், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்றார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்றைய தினம் பாதாள உலக குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நாட்டில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட முடியும் எனவும் அவர்கள் எவ்வாறு அச்சமின்றி வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்போது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவம்
ஊடகவியலாளர்கள் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரை பல்வேறு கேள்விக்கணைகளினால் துளைத்திருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துள்ளதாக கூறும் அரசாங்கம் நீதிமன்றத்தில் ஒருவருக்கு பாதுகாப்பினை வழங்க முடியாத நிலையில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியேறிய அமைச்சர்
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அமைச்சர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறி இருந்தார்.
வாகனத்தை வரவழைத்து ஊடகவியலாளரின் கேள்விகளுக்கே பதில் அளிக்காது அவர் வெளியேறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |