வாராந்தம் மாறப்போகும் எரிபொருள்களின் விலை! மே மாதம் முதல் புதிய நடைமுறை
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்த முறைக்குப் பதிலாக, உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வாராந்தம் விலைகளை மாற்றியமைக்கும் புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மே மாதம் முதல் நடைமுறை
இந்தப் புதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், இது எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய நடைமுறையின்படி, உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் பட்சத்தில், அதன் நன்மையை வாராந்த அடிப்படையில் மக்களுக்கு வழங்க அரசு எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, உலக சந்தையில் விலைகள் அதிகரிக்கும் போது, உள்நாட்டிலும் விலைகள் அதற்கேற்ப உயர்த்தப்படும். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எண்ணெய் சந்தையில் நிலவும் தளம்பல் நிலையைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணய முறை
இலங்கைக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை விடுவிப்பது தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வியாழக்கிழமை பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டது.

எனினும், நலிவடைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் அதேவேளை, எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் விலை நிர்ணய முறையைச் சரியாகப் பின்பற்றுவது கட்டாயம் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
நாட்டின் நிதி அபாயங்களைக் குறைப்பதற்கும், நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கும் எரிபொருள் விலைகளை உலக சந்தையுடன் ஒப்பிட்டுத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் எனச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பின்னணியிலேயே, அரசு இந்தத் தீர்மானமிக்க நகர்வை மேற்கொண்டுள்ளது. புதிய முறை நடைமுறைக்கு வரும்போது, மாதக் கணக்கில் காத்திருக்காமல் உலகச் சந்தை மாற்றங்கள் வாராந்தம் இலங்கையின் எரிபொருள் விலைகளில் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.