வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி வியாபாரம்! பின்னணியில் இரண்டு அமைச்சர்கள்
இந்நாட்டு மக்களை தொழில் வாய்ப்புகளுக்காக இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி வியாபாரம் ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறித்த வியாபாரத்திற்கு பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் நாட்டிலுள்ள இலங்கைக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
துப்புறவு தொழிலுக்காக விசா
மேலும் கூறுகையில், “ தற்போது புதிய மோசடி வியாபாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் (Cleaning) துப்புறவு தொழிலுக்காக விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி ஒரு நபரிடமிருந்து சுமார் 28 இலட்சம் ரூபா கொள்ளையிடப்படுகின்றது.
இஸ்ரேலில் துப்புறவு தொழிலுக்காக அரேபியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களுக்கு மாத்திரமே விசா வழங்கப்படுகின்றது. இலங்கையர்களுக்கு துப்புறவு தொழிலுக்காக இஸ்ரேலில் ஒருபோதும் விசா வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு இலங்கையில் இருந்து செல்லும் மக்களுக்கு இஸ்ரேலில் எவ்வித தொழில் வாய்ப்புகளும் பெற்றுக்கொடுப்பதில்லை. சுற்றுலா விசாக்கள் மூலமும் மக்கள் இவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர்.
வியாபாரத்தின் பின்னணி
இந்த வியாபாரத்திற்கு பின்னால் பியுரோ அதிகாரிகள் சிலரும், கோட்டாபய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருவரும் இருக்கின்றனர்.
முறையாக பதிவு செய்யப்படாத ஏஜன்சிகள் ஊடாக பொய்யான ஆவணங்களை தயார்படுத்தி இவ்வாறு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.” என தெரிவித்துள்ளனர்.
ஆகவே இவ்வாறான மோசடி செயற்பாடுகளுக்கு சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.