சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது - கடற்படையினர் தீவிர சோதனை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு கடற்றொழிலாளர்கள் வெற்றிலைக்கேணி கடற்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் மின் உபகரணங்கள் உட்பட கடற்றொழில் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம்(20.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட டோரா தேடுதல் நடவடிக்கையின் போதே நான்கு படகுகளில் சட்டவிரோத மின்ஒளி பாய்ச்சியும், மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இன்று(21) அதிகாலை 01:30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 மணியளவில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நால்வர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று நபர்கள் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ஆழியவளையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து 04 படகுகள் (Dinghies/FGD), வெளி இணைப்பு இயந்திரங்கள் (OBM), சுமார் 43 லிட்டர் மண்ணெண்ணெய், மின்கலங்கள் (Batteries), நீரில் மூழ்கிப் பயன்படுத்தக்கூடிய 11 மின்விளக்குகள், நங்கூரங்கள் மற்றும் 03 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் யமஹா 40 HP மற்றும் சுசுகி 25HP ஆகிய இயந்திரங்களும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் சான்றுப் பொருட்களாக மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் வளத்தை அழிக்கும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam