ஊரடங்கு நேரத்தில் போதைப்பொருள் கடத்திய நால்வர் கைது: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு (Photos)
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு ஐஸ் போதைப் பொருள் கடத்திச் சென்ற வெவ்வேறு சம்பவங்களில் கணவன், மனைவி உட்பட நால்வரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி வைச்சந்தி 5ம் கட்டை பொலிஸ் வீதிச்சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கல்முனையில் இருந்து காத்தான்குடியை நோக்கிச் சென்ற நீலநிற முச்சக்கரவண்டியை நிறுத்தி அதில் பயணித்த மூவரைச் சோதனையிட்டனர்.
இதன் போது சாய்ந்தமருதைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரிடமிருந்து இருந்து 1 கிராம் ஐஸ் போதைப்பொருளையும், அவரது 17 வயதுடைய மனைவியிடம் இருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் அவர்களின் நண்பரிடமிருந்து ஒன்றரை கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டதையடுத்து மூவரையும் கைது செய்துள்ளனர்.
அதேவேளை பொலிஸாருக்கு கிடைத்த மற்றுமாரு தகவலுக்கமைய கல்முனையில் இருந்து காத்தான்குடிக்கு கார் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி டிப்போ சந்தியில் மடக்கிப் பிடித்துச் சோதனையிட்ட போது அதில் பயணித்த ஒருவரிடமிருந்து ஒன்றரை கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று முன்னிறுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.