தென்னிலங்கையில் வெளிநாட்டவரின் மேஜிக் வித்தை - பணத்தை இழந்து தவிக்கும் ஊழியர்
காலி - தெவட்ட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் மேஜிக் வித்தை மூலம் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இலங்கையின் ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாளை பார்க்க ஆசையாக இருப்பதாகக் கூறி, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் கையில் இருந்த சில பண நாணயத்தாள்களை தொட்ட வெளிநாட்டவர், மேஜிக் வித்தை மூலம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
இந்தத் திருட்டு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ளதாக காலி துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் இந்தத் திருட்டு குறித்து எரிபொருள் நிலையத்தின் முகாமையாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக காலி துறைமுகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் மெஷான் இந்திரக டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வெளிநாட்டவர் வந்த விதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விதம் ஆகியவை பாதுகாப்பு கமரா காட்சிகளின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளன.
மேஜிக் வித்தை
இந்த வெளிநாட்டவர் வாடகை கார் ஒன்றில் வந்துள்ளார்.
அத்துடன் அந்த காரின் இலக்கத்தைக் கொண்டு வாடகை கார் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக காரைக் கண்காணித்து, இந்த வெளிநாட்டவர் வத்தளைப் பகுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும், அவர் தனது பாட்டியுடன் இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுபோன்ற மேஜிக் வித்தைகளைப் பயன்படுத்தி வேறு ஏதேனும் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.