கொழும்பில் எரிபொருள் வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்காக செயற்படுத்தப்படும் திட்டம்
இலங்கையில் தற்போது நெருக்கடி நிலை நீடித்து வருகிறது. பெரும்பாலானோர் நிலைமைகளை ஓரளவிற்கு சமாளித்து செல்லும் போதும் பலர் ஒரு நேர உணவிற்கு கூட கஷ்டப்படும் நிலை காணப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்கும் போது கணவன் டீசல் அல்லது பெற்றோலுக்காக வரிசையில், இன்னொரு பக்க வரிசையில் மண்ணெண்ணெய்க்காக மனைவி என தொழிலுக்கும் செல்ல முடியாமல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
அத்துடன் முழு நாளும் வரிசைகளிலேயே அவர்கள் நிற்க வேண்டிய நிலைமை காணப்படுவதால் நேரத்திற்கு உணவு உண்பதையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் ஆசிப் அஸ்லம் கொழும்பில் எரிபொருளுக்கான வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வீட்டிலேயே உணவு சமைத்து அதை பொதி செய்து நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களுக்கு அவர் வழங்கி வருகின்றார்.