ரிசாட் வீட்டில் இடம்பெற்ற வன்முறைகளை விசாரிக்க ஐந்து பொலிஸ் குழுக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்பில் விசாரணை செய்வதற்கு 5 விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கண்காணிப்பில் இந்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரிசாட் பதியுதீனின் வீட்டிற்கு 11 யுவதிகள் பணிப்பெண்களாக அழைத்துவரப்பட்டு உள்ளதாகவும் இதில் ஒரு யுவதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் மற்றுமொரு யுவதி அண்மையில் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏனைய சில பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வீட்டு வேலைக்கு அழைத்து வரப்படும் பெண்களை ரிசாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 வயது யுவதி ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ரிசாத் பதியுதீன் மச்சான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஏனைய பணிப்பெண்களுக்கு நடந்த கொடுமைகள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.