இறுதிப்போரில் அம்பலமான யோஷித ராஜபக்சவின் போலி நாடகம் - படகை செலுத்திய முன்னாள் வீரரின் பரபரப்பு தகவல்கள்..!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்த களத்தில் தானும் ஈடுபட்டதாக சோடிக்கப்பட்ட காணொளிகளை பதிவு செய்து மக்களுக்கு காண்பித்ததாக இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற அதிவிரைவு டோரா படகு அணியில் பணியாற்றிய நுவான் முணசிங்க என்பவர் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார்.
யோஷித கடற்படை வீரர்களின் மனவலிமையை அதிகரித்த விதம் தொடர்பில் இலங்கை கடற்படையில் இருந்தவர்கள் -அன்றிலிருந்து இன்று வரை பணியாற்றுபவர்கள் இது தொடர்பான சம்பவங்களை பதிவிடுமாறு முகநூல் பதிவொன்றில் முன்னாள் கடற்படை வீரர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை துறைமுகத்தில் நடந்த சம்பவம்
தீவிரமாக யுத்தம் நடந்துகொண்டிருந்த அந்த நாட்களில் நாங்கள் ஒழுங்கான தூக்கம், உணவு, நீர் இல்லாமல் முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கடமையில் ஈடுபட்டிருந்தோம்.

அதிவிரைவு டோரா படகுகள் திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே வரும். அப்படி வந்து, இரண்டு மணித்தியாலங்கள் வரை ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கடலுக்குச் செல்லும். அந்த நாட்களில் நாங்கள் அதிக களைப்புடன் தான் இருப்போம்.
ஒரு நாள், அப்படி ஒரு டோரா படகிற்கு எரிபொருள் நிரப்புவதற்காகத் துறைமுகத்திற்கு வந்திருந்த வேளையில் அன்றைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கரன்னாகொட அங்கு வந்திருந்தார்.
துறைமுகத்திற்கு தேசிய ரூபவாஹினி ஊடகப்பிரிவினரும் வந்திருந்தனர். கரன்னாகொட சொன்னார்: 'இப்போது ஜனாதிபதியின் மகன் யோஷித வருகிறார்.
சுமார் 10 டோரா படகுகள் துறைமுக வாயிலுக்கு செல்லத் தயாராக இருங்கள். யோஷித கடலுக்குச் சென்று யுத்தத்தை வழிநடத்துவது போல ஒரு சிறிய வீடியோ செய்ய வேண்டும்.
' இது மேலிடத்திலிருந்து வந்த கட்டளை. அவர் சொன்னார்: 'நீங்கள் எல்லாரும் பாவம் என்ன செய்வது களைப்பைப் பொருட்படுத்தாமல் போய் அதற்குச் சம்மதியுங்கள்.'
எதிர்மறையான பதிவுகள்
சிறிது நேரத்தின் பின்னர் யோஷித ராஜபக்ச வந்தார். வந்து ஏறியது என்னுடைய டோரா படகில் தான். துறைமுக வாயிலுக்கு வெளியே நாங்கள் சுமார் 10 டோரா படகுகளில் சென்று கடலில் ஒரு 15 நிமிடங்கள் வரை யுத்த நடவடிக்கையில் ஈடுபடுவது போல ஒரு வீடியோ செய்தோம்.

அதைச் செய்துவிட்டு மீண்டும் துறைமுகத்திற்கு வந்தோம். அன்றைய அட்மிரல் வல்கம்பாய, அட்மிரல் அத்துகொட, அட்மிரல் திசாநாயக்க, அட்மிரல் ஹேமந்த மற்றும் அட்மிரல் பெரேரா ஆகியோர் இதற்குச் சாட்சிகள்.
இவரால் கடற்படையினரின் மன உறுதி (moral) ஒன்றும் அதிகரிக்கவில்லை. அந்த நாட்களில் அதிகாரிகள் அனைவரும் இவரைப் பார்த்து வெறுத்துப் போய் இருந்தனர் என்று பதிவிட்டுள்ளார்.
இதில் எதிர்மறையான பதிவுகளே அதிகம் காணப்படுகின்றன. யோஷித ராஜபக்ச கடற்படை வீரர்களின் மனவலிமையை அதிகரிக்கவே கடற்படையில் சேர்ந்தார் என்ற கருத்தை சமூகத்தில் விதைப்பதற்கே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பட்டுள்ளன.