சர்வதேச நாடுகளின் வெளியுறவுத் துறையுடன் பேசுவதற்கான ஈழத்தமிழரின் பொதுக் கொள்கை!
இலங்கைத் தமிழர்களின் பொது கொள்கைகள் பற்றிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட தமிழர்களின் பொது கொள்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு,
இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு ஒரு ஜனநாயக, அமைதியான, நிரந்தர மற்றும் அரசியல் தீர்வு காண அனுமதிப்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு ஒரு இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை முன்னெடுத்தல் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை இரத்து செய்தல் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்ற விடயங்களுக்காக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும், இனப்படுகொலை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மாநாட்டிலும் பரிந்துரைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அமெரிக்க அரசுடன் பேசுவதற்கான பொதுகொள்கைகளை அமெரிக்காவை தளமாக கொண்ட ஆறு அமைப்புகள் வரையறுத்துள்ளன.
அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோடு இச்சந்திப்பு விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இனிவரும் காலங்களில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச நாடுகளுடன் பேசப்படும் பேச்சுக்களின் போது மேற்குறிப்பிட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையிலேயே பேச வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.