சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்க கோட்டாபய செல்வாக்கு செலுத்தவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செல்வாக்கு செலுத்தினார் என்ற தகவல்களில் உண்மையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவசர தேவைகளுக்காக சினோபார்ம் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சீனோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இலங்கை ஜனாதிபதியின் செல்வாக்கா காரணம் என்ற வகையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்நாயக்க நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாகச் சீன தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறெனினும் செல்வாக்கு காரணமாகத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், உரிய முறையில் ஆராய்ந்து தகுதியான தடுப்பூசிக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சுயாதீனமான நிபுணர்களினால் எவ்வித தலையீடுகளும் இன்றியே தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.