கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இரண்டாவது நாளாக முன்னெடுப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், இரண்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (05) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதியில் கொக்கிளாய் முல்லைத்தீவு பிரதான வீதியின் குறிப்பிட்ட ஒரு பகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் மனித எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை நிற ஆடைகள்
இந்த பகுதிக்கு மேலாக புதிதாக தகர கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது பச்சை நிற ஆடைகள் வெளித் தெரிந்திருந்தது.
நாளை காலை மூன்றாம் நாள் அகழ்வு பணி நடைபெறவுள்ளதோடு மிகுதி உடற்பாகங்கள் முழுமையாக எடுக்கப்படும் என நம்பப்படுகிறது.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பண பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றைய தினம் மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் ஆரம்பமாகி இன்றையதினம் இரண்டாம் நாள் இடம்பெற்றது.
மேலும் இந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதுவரையில் 40மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும், துப்பாக்கிச்சன்னங்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகள், ஆடைகள் உள்ளிட்ட தடையப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
இவ் அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்,தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தொல்லியல் திணைக்களத்தினர், காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த மற்றும் பணிப்பாளர் ஜெ.தற்பரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மனித உரிமைகள் சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப்பணிகள் பத்துநாட்கள் மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |