இளம் குற்றவாளிகளின் பயிற்சி பாடசாலையிலிருந்து 9 கைதிகள்! வெளியான தகவல்
பதுளை - தல்தென சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 9 கைதிகளில் அருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை-தல்தெனஇளைஞர் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் இருந்த ஒன்பது கைதிகள் இன்று (17.04.2023) அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அருவர் கைது
தப்பியோடிய கைதிகளில் இருவரை தல்தென பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தப்பிச் சென்ற மேலும் நான்கு கைதிகள் இன்று (17.04.2023) இரவு கைது செய்யப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசிகள், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை தல்தென இளைஞர் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் கொழும்பு, மோதர மட்டக்குளி, வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 22, 24, 26 மற்றும் 27 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் பதுளை தல்தென இளைஞர் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் புனர்வாழ்வளிக்க இரண்டு மாதங்களுக்கு முன்னர் புனர்வாழ்விற்காக இங்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எஞ்சிய கைதிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இந்த சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.