தமிழர்களை விரட்ட முயற்சிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதம்: சிவசக்தி ஆனந்தன் பகிரங்கம்
தமிழர்களை விரட்டும் முயற்சிகளை சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் நாளை திங்கட்கிழமை (19.06.2023) அன்று அனுட்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தனி நாட்டிற்கான ஆயுதப் போராட்டம் 2009இல் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தனது கோரமுகத்தை தமிழர்கள் மீது காட்டிவருகிறது.
தமிழர்களுக்கெதிரான வன்முறை
2009ஆம் ஆண்டுவரை வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு தமிழர்களுக்கெதிரான ஒவ்வொரு வன்முறையிலும் அவர்களை அங்கு அனுப்பிவிட்டு, இப்பொழுது எமது தாயகப் பிரதேசத்திலிருந்தும் எம்மை விரட்டும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன.
நாம் இப்பொழுது சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்பவர்களாக உள்ளோம்.
இந்த நிலையில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டுமாக இருந்தால், நாம்
எமது குறுகிய கட்சிசார் அரசியல் நலன்களை முன்னிறுத்தாமல், எமது வருங்கால
சந்ததி அச்சமின்றி, தமது தாயகப் பிரதேசத்தில் சகல உரிமைகளுடன் வாழ்வதற்கான
சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமை.
பல்வேறு காரணங்களுக்காக நாம் தனித்தனி அரசியல் கட்சிகளாக மக்கள் சேவை ஆற்றலாம். ஆனால் எமது ஒட்டுமொத்த நோக்கம் அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாமும் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணர்ந்து, எமது இனத்தின் சமத்துவ சகவாழ்விற்காக உழைப்பதாகவே இருக்க வேண்டும்.
33ஆவது தியாகிகள் தினம்
எமது செயலாளர் நாயகம் தோழர் க. பத்மநாபா சொன்னதைப் போன்று 'நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிப்பவர்களா இருக்க வேண்டும்.
அதனடிப்படையில் அவரின் மற்றொரு கூற்றின் படி, “ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் போராடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் அனைவரும் ஐக்கியமாக எமது இலட்சியமான தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம், என்பதை இன்றைய 33ஆவது தியாகிகள் தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சபதமேற்கிறது என தெரிவித்துள்ளார்.
