வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்! யாழ்.மறைமாவட்ட ஆயர் (Video)
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்று (12) சஜித் பிரேமதாஸவின் பிறந்த தினம் ஆகையால் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது ஆயர் இல்லத்தில் பிரேமதாஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் ஆயரால் விசேட ஆசீர்வாத பூசை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் புத்திக பத்திரன, இரான் விக்ரமரட்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட ஆயர்,
சஜித் பிரேமதாஸ தன்னாலான முயற்சியினை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார். ஏற்கனவே எதிர்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகள் செய்யவில்லை ஆகவே அவருடைய அந்த பணியினை பாராட்டவேண்டும்.
எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திர தொகுதிகளை வழங்கியுள்ளார். அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார். சுகாதாரமும் கல்வியும் அவருடைய முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது. அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எங்களுடைய பிரச்சினைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. நான் மூன்று விடயங்களை குறிப்பாக குறிப்பிட்டேன் அதாவது கல்வி, மீன்பிடி, விவசாயம் இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அத்தோடு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இருந்தேன்.
ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் அதனை செய்ய முடியும் என தெரிவித்தார் என்று யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், சஜித் பிரேமதாச இன்று காலை 10 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.