மகிந்தவை சூளும் ஆபத்துக்கள் - ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் அதிருப்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் களத்திற்குள் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் பல அரசியல்வாதிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்காக மகிந்தவின் உடல்நலத்திற்கு ஆதரவு வேண்டி தொடர் பிரித் போதனைகளையும் சில தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மகிந்தவின் மரணத்தின் பின்னர் அவரது உடலை பதப்படுத்த வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்திருந்த கூற்று, ராஜபக்ச குடும்பத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் நடவடிக்கை
இந்நிலையில் மகிந்தவின் அரசியல் நடவடிக்கைகளில் அஜித் ராஜபக்சவை ஈடுபடக் கூடாது என குடும்பத்தினரால் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் அரசியல் அநாதைகளான பல அரசியல்வாதிகள் மகிந்தவின் ஆதரவை நாடும் நிலை அதிகரித்து காணப்படுகிறது.
பிரித் போதனை நிகழ்வுகள் என்ற போர்வையில் மகிந்தவை விட்டு விலகிச் சென்ற பல அரசியல்வாதிகள் மீண்டும் ஒன்றிணைவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அநுர அரசாங்கம்
இவ்வாறான நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராஜபக்ச குடும்பத்துடன் ஒத்துழைக்காத எவரையும் மீண்டும் அழைத்து வரக்கூடாது என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமகாலத்தில் வலுவான நிலையில் அநுர அரசாங்கம் உள்ள நிலையில், மற்று வலுவான சக்தி ஒன்றை உருவாக்கும் அரசியல் செயற்பாடுகள் திரைமறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.