சிங்கள சாதிபேத அரசியல் போட்டிக்கு பலிகடாவாகும் ஈழத்தமிழினம்
இலங்கை அரசியலில் ""கரவ"" சாதியில் இருந்து தான் பிலிப் குணவர்த்தன, டாக்டர்.என் எம் பெரேரா, போன்றவர்களும், கரவ சாதியில் இருந்து கிளைவிட்ட ""சலாகம "" டாக்டர். கொல்வின் ஆர் டி சில்வா, அரை இடதுசாரியான விஜயகுமார ரணதுங்க போன்றவர்கள் ஜனநாயக மரபுகளுக்கூடாக புரட்சிகரமான இடதுசாரி தலைவர்களாக வந்தார்கள்.
அவ்வாரறே ரோகண விஜயவீர, ரில்வின்.டி.சில்வா போன்ற இடதுசாரி ஆயுதப் போராட்ட தலைவர்களும் ""கரவ"" சாதியிலிருந்து வந்தார்கள். ஜேவிபியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கரவ சமூகத்தை சேர்ந்தவர்களே. அவர்கள் தான் ஜே.வி. பி கிளர்ச்சியின் போது "'கொய்கம"" சாதிமேலாதிக்கவாதிகளால் ஈவிரக்கமின்றி அதிக அளவில் கொல்லப்பட்டார்கள் என்பனவும் இங்கு அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கது.
தமக்கேற்பட்ட தோல்விகளின் பின்னணியில் இத்தகைய புரட்சிகரமான இடதுசாரி தலைவர்கள் எல்லாம் பின்னாளில் ""கொய்கம"" சாதிய அரசியலுக்குள் அடிபட்டுச் , சரணடைந்து கரைந்துபோனமை இன்னொரு துயரகரமான பக்கமே.
இத்தகைய நீண்ட ஒரு வரலாற்றுப் பின்னணியில் சேனநாயக்க குடும்பத்திற்கும் பண்டாரநாயக்க குடும்பத்திற்கும் இடையேயான சாதிரீதியான போட்டி சுதந்திர காலத்துக்கு முன்னரே இருந்துவந்தது. அது சுதந்திரத்தின் பின்னர் பெரிதாக வெடிப்பு எடுத்து இரண்டு கட்சிகள் என்ற வடிவத்தைப் பெற்றது.
""கொய்கம"' சாதியைச் சேர்ந்த சேனநாயக்க குடும்பத்தின் குடும்ப மேலாதிக்கத்தினால் அரசியல் ஆதிக்கத்தை பங்கிடுவதில் முரண்பாடுகள் வெடித்தன. இதனால் பாதிப்படைந்த பண்டாரநாயக்க , ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இவ்வாறு ""கொய்கம"" இரண்டு அணிகளாக அணிதிரண்டு தமது தேவைக்கேற்ற வகையில் சாதி அடிப்படையில் கூடுகளை அமைத்து மேல் எழுந்தனர். கரையோர சிங்களவர்களில் தென்மாகாண கரையோர சிங்களவர்கள் கடும்போக்காளர்கள். அதனால் தன்னை பலப்படுத்துவதற்கு பண்டாரநாயக்க தென்மாகாணத்தில் இருந்து இன்றைய ராஜபக்சக்களின் தந்தையும் கிறிஸ்தவ கத்தோலிக்கரான டொன் அல்வின் ராஜபக்சேவை தனது வலக்கரமாக இணைத்து வைத்துக்கொண்டார்.
அத்தோடு சிங்கள கரவ சமுகத்தின் முக்கியமான தலைவரான சி.பி.டி.சில்வாவையும் தனது இடக்கரமாக இணைத்துக் கொண்டு தனது கட்சியை பலப்படுத்தினார்.
பண்டாரநாயக்க குடும்பமும், டொன் அல்வின் ராஜபக்ச குடும்பமும் ""கொய்கம"" சாதியினர். அதனாலேதான் அதற்கு அடுத்த நிலையில் ""கருவ"" சமூகத்தை இணைப்பதற்காக இரண்டாம் கட்ட தலைவராக சி.பி.டி சில்வா உப தலைவராக நியமிக்கப்பட்டு கட்சி வடிவமைக்கப்பட்டது.
எப்போதுமே தலைவர்களாக ""கொய்கம"" சாதியினரே இருப்பர். ""கொய்கம"" தவிர்ந்தவர்கள் உபதலைவர்களாகவே இருக்க முடியும். 1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பண்டாரநாயக்கவினால் பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ""மகாஜன எக்ஸத் பெரமுன"" ( M.E.P) போலவே இன்று ராஜபக்சக்கள் தலைமையிலான 18 கட்சிகளின் கூட்டான பொதுஜன பெரமுனவும் சாதி அடிப்படையிலான கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதுவே.
பிரதமராயிருந்த பண்டாரநாயக்க 1959 ஆம் ஆண்டு ஐநாவுக்கு செல்லவேண்டி ஏற்பட்டபோது ஒரு பதில் பிரதமரை நியமிக்க வேண்டி இருந்தது. அதற்கு கட்சியின் உப தலைவராக இருந்த சி.பி.டி சில்வா ""கரவ"" சமூகத்தினர் என்பதனாலேயே அவரை பதில் பிரதமராக நியமிக்காமல் கொய்கம சாதியைச் சேர்ந்த ""பாஷா பெரமுன கட்சியின் ஒரே ஒரு உறுப்பினரான தசநாயகாவை நியமித்தமை நினைவிற் கொள்ளப்படத் தக்கது.
ஐநா செல்ல இருந்த பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டதும் அவரின் மரணத்தின் பின்னர் பிரதமராக தனநாயக்காவையே கட்சி நியமித்தமை என்பது சாதிய ஒடுக்குமுறையின் வலிமையை இங்கும் காணமுடிகிறது.. அரசியலிற் தோல்வி அடைந்த இடதுசாரிகள் 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திரக் கட்சிக்குள் கரைந்து போகும் வரலாறு ஆரம்பமாகிவிட்டது.
1970 உடன்"" கரவ"" சமூகத்தின் புரட்சிகரமான ஜனநாயக நாடாளமன்ற அரசியல் அஸ்தமித்து போகின்றது. அதனை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட ஜே. வி. பி. தலமையிலான புரட்சிகர ஆயுதப் போராட்டம் ""கொய்கம '"சாதிய மேலாதிக்க உயர்குலத்தின் அரச இயந்திரத்தினால் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கப்பட்டது. அப்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்குப் பின்னர் கரவ சமூகத்தின் அரசியல் என்பது கொய்கம சாதி மேலாண்மை அரசியலுக்குள் கரைந்து அடிபட்டுப் போய்விட்டது. அதேவேளை ""உயர்ஜாதி "" குடும்ப ஆதிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சாதாரண சலவைத் தொழிலாளி சமூகத்திலிருந்து வந்த பிரேமதாசா குழம்பில் காணப்பட்ட உதிரிப் பாட்டாளிகளை(லும்பன்) அடிப்படையாகக் கொண்ட சண்டித்தன அரசியலின் ஊடாக படிப்படியாக மெல்ல எழுந்தார்.
இங்கே வன்முறை இல்லாமல் கொய்கம தவிர்ந்த மற்றவர்களால் வெற்றி பெற முடியாது என்பது கவனிக்கத்தக்கது. பிரேமதாசாவின் தலைமைப் பதவியை தடுக்க ஜே .ஆர் . ஜெயவர்தன பல வகைகளிலும் முயன்றார்.
அவ்வாறே மகா சங்கங்கத்தினரும் பிரேமதாசவை தடுப்பதற்கான எல்லா வகையான முயற்சிகளையும் செய்தார்கள். ஆயினும் நெருக்கடி நிலைமைகளை பயன்படுத்தி பிரேமதாசா தடைகளை கடந்து சென்றார் என்பதே பொருத்தமானது.
அன்றைய காலத்தின் இந்திய இராணுவ பிரசன்ன நிலைகளைப் பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்னிலைப்படுத்தி சிங்கள மக்களின் விருப்புக்குரிய பாத்திரத்தை ஏந்தி பிரேமதாச தன்னுடைய பாதாள உலக கோஷ்டிகளின் வன்முறை அரசியலினுாடாக அரசுத் தலைவரானார்.
இந்த நிகழ்வானது இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தின் பின்னணியில் தற்செயலாக ஏற்பட்ட அரசியல் விபத்தேயன்றி ஜனநாயக அரசியல் வளர்ச்சியின் வெளிப்பாடல்ல. ஆனால் கடந்த அரசுத் தலைவர் தேர்தற் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க ஆளுமையற்ற தலைவர் என்பதனால் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார் என்ற தோற்றப்பாடு கட்டப்பட்டது. ஆனால் அவரின் தலைமைத்துவத்தை சிங்கள-பௌத்த உயர்குழாமும் பௌத்த மகாசங்கங்களும் விரும்பவில்லை.
அதனை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் ஆளுமையற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலாக உயர் குழாத்தைச் சேர்ந்த கரு ஜயசூர்யாவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் கட்சிக்குள் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் ""உயர் சாதியினர்"" இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டபோது சஜித்தின் பக்கம் மேலோங்கும் நிலை காணப்பட்டது.
இதனைக் கண்ணுற்ற உயர் குழாத்தினர் கருஜெயசூரியவை பின்வாங்க வைத்து சமாதானப்படுத்தி ரணில்-கருஜெயசூர்யா அணியினர் இணைந்து கொண்டனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
இருப்பினும் சாஜித் மிகக் கடுமையாக முயற்சித்த போதிலும் கட்சிக்குள் ""உயர் ""குழாத்தினர் மேற்கொண்ட எழுப்பினால் ஜனநாயகரீதியில் கட்சிக்குள் அவரால் நிமிர்ந்துநிற்க முடியவில்லை. இதனாலேயே சஜித் பிரிந்து தனிக்கட்சி அமைக்க வேண்டிய சூழல் தோன்றியது .
இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட சாதிப் பாகுபாட்டினால் ஏற்பட்ட பிளவேயாகும். எனினும் மலையகத் தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் அனுசரணையுடன் எதிர்க்கட்சித் தலைவராக அமையக்கூடிய வாய்ப்பை சஜித் பிரேமதாஸ பெற்றுக்கொண்டார்.
அவ்வாறு அவர் பெற்றிருந்தும் இரண்டாம் கட்ட தலைவர் என்ற நிலையை எட்ட முடியாதவராக உள்ளார். சிங்கள"" உயர் "" குழாத்தினர், பௌத்த மஹா சங்கத்தினர் ஆகியோரின் அங்கீகாரமற்ற, எதிர்ப்புக்குரியவராகவே இருப்பது சஜித் பிரேமதாசவின் பலவீனமான பக்கமே.
எனவே அவரால் இலங்கையின் தலைமைத்துவ நிலையை அடைவது என்பது எதிர்காலத்தில் அரிதினும் அரிது. அது சிங்கள பௌத்த குடும்ப ஆதிக்க சாதி அரசியலிலில் அனேகமாக நடைமுறைச் சாத்தியமற்றது போல் தெரிகிறது.
தொடரும்..