ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவர் - க. கோகிலறமணன்
ஆசிரியர்களின் மூன்று கோரிக்கைகளையும் அரசாங்கம் சீர் செய்யும்வரை போராட்டம் தொடரும்.
இந்த போராட்டத்துக்குக் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு கல்வி வலய செயலாளரும் மாவட்ட மத்தியக் குழு உறுப்பினருமான க. கோகிலறமணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள ஜே.வி.பி. கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்த நிலையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் மட்டக்களப்பில் இருக்கின்ற 5 கல்வி வலயங்களும் அதற்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்கி நிகழ்நிலை கற்பித்தல் நிலையில் இருந்து விலகி பூரண ஆதரவை வழங்கிவருகின்றோம்.
அதிபர், ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு, ஒன்லைன் கற்பித்தலுக்கு மாணவர் ஆசிரியர்களுக்கு போதிய வசதிகளை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், கொத்தலாவை சட்ட மூலத்தை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் ஆகிய 3 விடையங்களை முன்வைத்து இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது ஒரு தனிமனித போராட்டம் அல்ல மாணவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல 30 வருட காலத்துக்கு மேலாக அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சனைக்கு அரசாங்கங்கள் மாறி மாறி வருகின்ற போதும் இதுவரை ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைத்து வருவதைப் போன்று தொடர்ச்சியாக ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
கொத்தலாவலை என்பது பல்கலைக்கழகங்களைத் தனியார் மயப்படுத்தி இராணுவத்தை அதற்குள் உட்புகுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தனியார் மயப்படுத்துகின்ற மற்றும் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட எமது சங்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த ஒன்றரை வருடங்களாக மாணவர்கள் கற்றல் விடையத்தில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை இந்த அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றகரமான விடையங்களை எடுக்கவில்லை.
கிராமப்புறங்களிலே அதிகமான மாணவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஒன்லைன் கற்பித்தல் ஓர்; இடர்பாடான நிலையாகக் காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே இவைகள் அனைத்தும் சீர் செய்யப்படவேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.