பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய பொருள்
கொழும்பில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தினசரி மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின் போது, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து கிரிபத்கொட முகவரிக்கு அனுப்பப்பட்ட பார்சலை, சந்தேக நபர் முன்னிலையில் திறந்து பார்த்தபோது, அதில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 65 கிராம் குஷ் மற்றும் 500 மில்லி லிட்டர் திரவ கோகோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தை மதிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 13 மில்லியன் ரூபாவுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ராகம பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என்பதுடன், சுற்றுலாத் துறையில் பணியாற்றி வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரும் வழக்குப் பொருட்களும் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதல் முறையாக இந்த கோகோயின் போதைப்பொருள் ஒரு கூரியர் நிறுவனத்தில் திரவ வடிவில் கண்டுபிடிக்கப்பட்டது என சுங்க ஊடகப் பேச்சாளரும் பதில் இயக்குநர் நாயகமுமனான சீவலி அருக்கோட தெரிவித்தார்.