காற்றாலை திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள்: டக்ளஸ்(Photos)
கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெளதாரிமுனை காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
காற்றாலை திட்டம்
மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும்
அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் - ஆலோசனைகள் மற்றும் வாதப்
பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான
முறையில் அடையாளப்படுத்தியுள்ளேன்.
அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி கொண்டதன் பின்னர், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் பூநகரி, கௌதாரிமுனையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை திட்டத்தின் காரணமாக கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளது.
முதலீட்டாளர் உத்தரவாதம்
அத்துடன் அடிப்படை, சமூக மற்றும் வாழ்வாதார நன்மைகளையும் ஏற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கௌதாரிமுனை கிராமத்திற்கான சுமார் 17 கிலோமீற்றர் வீதியை காபபெற் வீதியாக அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 40 கிலோமீற்றர் நீளமான உள்ளக வீதிகளும் உருவாக்கப்படவுள்ளன.
அதேபோன்று, கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களினால் உத்தவரவாதம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
