மனைவி மற்றும் மாமியார் தாக்கி குடும்பஸ்தர் பலி!
குருவிட்ட கந்தலந்த பிரதேசத்தில் மனைவி மற்றும் மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது 35 வயதான குறித்த நபரை அசிட் வீசியும் பொல்லால் அடித்தும் கொலை செய்துள்ளனர் என்று குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின்போது படுகாயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் (மனைவி, மாமி) குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்தவர் குடிக்கு அடிமையாகி மனைவியை அடித்துத் துன்புறுத்துபவர் என்றும், இவருக்கு எதிராக மனைவியால் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவ தினம் குடும்பஸ்தர் குடித்துவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டபோது, தற்பாதுகாப்புக்காக இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்றும் அவரது மனைவியும் மாமியாரும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.