வைத்தியர் சிவரூபன் வழக்கில் சாட்சிகளை பதிவு செய்ய தவணை
கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபன் தொடர்பான வழக்கின் சாட்சிகளை பதிவு செய்வதற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் மற்றும் 05 ஆம் திகதிகள் தவணையிடப்பட்டுள்ளது.
வைத்தியர் சி.சிவரூபன் தொடர்பான வழக்கு இன்று (05-06-2023) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.ஏ. சகாப்தீன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த (18.08.2019) அன்று கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாட்சியின் வாக்கு மூலம்
குறித்த வழக்கில் வைத்தியர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சினுடைய சட்ட ஆலோசகருமான யூ.ஆர்.டி. சில்வா முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது இராணுவ அதிகாரியான சாட்சியின் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக இன்று அழைக்கப்பட்டிருந்த போது, சாட்சி சமூகமளிக்காத நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் 05 ஆம் திகதிகள் விளக்கத்திற்காக தவணையிடப்பட்டுள்ளது.
பளை - கரந்தாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடி மருந்து தொடர்பு, தாளையடி கடற்பரப்பில் பாறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொதி தொடர்பு.
மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து குறித்த வைத்தியர் (18.08.2019) இரவு ஆனையிறவு பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |