போராட்டத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு அவசர அறிவிப்பு
தற்போதைய சமூகப் போராட்டத்தை ஆளும் கட்சி குறைத்து மதிப்பிடுவதாக பெஃப்ரல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் தமது பொறுப்புகளையும் புறக்கணிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் உருவாகும் சமூக அமைதியின்மை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்தால் நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெஃப்ரல் தெரிவித்துள்ளது.
மனித உயிர்கள் பறிக்கப்பட்டால், அந்த பொறுப்பில் இருந்து நீங்கள் அனைவரும் தப்ப முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே இத்தருணத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும் முழு நாடாளுமன்றமும் விரைவில் கூடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
எவ்வாறாயினும், நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்றம் முறையாகக் கூட்டப்படாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமளிப்பதாக பெஃப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து 7வது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.