நல்லாட்சி மீது கல்லெறிய வேண்டாம்: மைத்திரி
அனைத்து குப்பைகளையும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தூக்கி எறிய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ( Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு செய்தவற்றை விளக்கக் கூற தனியான கருத்தரங்கை கூட நடத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனது அரசாங்கம் எத்தனை சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது?. செய்தவை என்ன? என்பதை பற்றி தற்போது எவரும் பேசுவதில்லை. நல்லாட்சி, நல்லாட்சி எனக் கூறி கற்களை மாத்திரம் எறிந்து வருகின்றனர்.
தேர்தல் வரைப்படத்தை சுருட்டியது நல்லாட்சி அரசாங்கம் அல்ல, ஜே.ஆர். ஜெயவர்தன. நான் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு ஜனநாயகத்தை வழங்கியவன்.
உலகில் எந்த தலைவர் தனக்காக அதிகாரங்களை குறைத்துக் கொண்டார் எனவும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.